பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரிய மனுவை முடித்துவைத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
புதிய ஊதிய ஒப்பந்தம், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
எனவே, பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் பாதுகாப்பான, தடையில்லா போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அரசுப் போக்குவரத்து சேவைக்கு இடையூறு செய்வோர் மற்றும் தாமாக முன்வந்து பணி செய்ய விரும்புவோரைத் தடுப்பவர்கள் மீதும் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று, மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜெ. செந்தில்குமரய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு ஏற்கனெவே விசாரணைக்கு வந்தபோது, தொழிற்சங்கத்தினர் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும், தொழிற்சங்கத்தினர் பணிக்குத் திரும்ப தவறும்பட்சத்தில் அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், என். சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பேருந்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.