மதுரையில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீர் மரபினர் நலச் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீர்மரபினர் என்று ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாக சீர்மரபினர் பழங்குடியினர் என்று வழங்கவேண்டும். சீர்மரபினர் நல வாரியத்துக்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து சீர்மரபினருக்கு 9 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சீர்மரபினர் நலச் சங்கத்தினர் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை மதுரையில் புதன்கிழமை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் மதுரை வந்த நிலையில், உண்ணாவிரதத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிர்வாகிகள் உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி மனு அளித்தனர். அங்கும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்கிருந்து காளவாசல் பகுதிக்குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மாலையில் அங்கு சென்ற போலீஸார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதை அடுத்து, செல்லூர் மேலத்தோப்புப் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்துக்குச் சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.