பக்தி வழித் தமிழ் பரப்பும் மன்றங்கள்: திருவள்ளுவர் மன்றம்

மதுரை எஸ்.எஸ்.காலனி சக்தி வேலம்மாள் நகரில்  பெரியவர் வீதியில் கடந்த 62 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது திருவள்ளுவர் மன்றம்.
Updated on
1 min read

மதுரை எஸ்.எஸ்.காலனி சக்தி வேலம்மாள் நகரில்  பெரியவர் வீதியில் கடந்த 62 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது திருவள்ளுவர் மன்றம்.  உர வியாபாரியான நடராஜன் என்பவர்  திருக்குறள் மீதான ஈடுபாட்டால் மன்றத்தை ஆரம்பித்தார். வாரத்தில் ஓர் நாள் திருக்குறள் அறக்கருத்தை பொதுமக்களுக்கு விளக்கி உரையாற்றும் வகையில், தமிழ் அறிஞர்களை அழைத்து வந்து பேச வைத்தார்.
     திருக்குறளுடன் பக்தி வழியில் தமிழைப் பரப்பியும், அதன் வழியாக தமிழின் கலை, பண்பாட்டைக் காக்கவும், திருவள்ளுவர் மன்றத்தை அவர் தொடர்ந்து நடத்தினார்.  அவருக்குப் பின்னால்,  ஆசிரியர் அருணாசலம் மன்றத்தை  வெகுஜன கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரபலப்படுத்தினார்.  
      வாரம் ஒரு அறிஞர் உரை என்றிருந்த நிலை மாறி, தற்போது தினமும் ஒரு சிறப்புச் சொற்பொழிவு என மன்றத்தின் செயல்பாடு விரிவாக்கப்பட்டுள்ளது.       மன்றத்தில் உரையாற்றுவோர் அதற்கான சன்மானம் என்று எதையும் குறிப்பிட்டுக் கேட்பதில்லை. உரையாளர்களுக்கு மன்ற ஆண்டு விழாவில், சிறு பரிசு வழங்கப்படுகிறது. இந்த மன்றத்தில் கன்னிப் பேச்சாளர்களாக அறிமுகமாகி, தற்போது பலரும்  பிரபலமாகியுள்ளனர்.
     ராமாயணத்தில் திருக்குறள் கருத்துகள்,  மகாபாரதத்தில் திருக்குறள் கருத்துகள் என்ற பொருள்களில் உரைகள் அமைகின்றன.  நாலடியார் நல்லறம், இலக்கிய இன்பம்,  திருவள்ளுவர் அருளிய பொருளுரை, ஆன்மிகத்துக்கு   ஆழ்வார் படைப்புகள்,  ஒளவைத் திருக்குறள், பதினொன்றாம் திருமுறை என வாரத்தின் 6 நாள்களும் ஒவ்வொரு தலைப்புகளிலும் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன.  
       மன்றத்தில் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரியில்  நடைபெறும்  இரு நாள் விழாவில், மாநில அளவில் தமிழறிஞர்கள்,  தமிழ் ஆசிரியர்கள், திருக்குறள் அன்பர்கள் என பக்தி, இலக்கியச் சங்கமமாகவே கூடி கலந்துரையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவை முன்னிட்டு, அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் திருக்குறள் அதிகாரங்களை குறிப்பிட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு, பரிசளித்தும் வருகின்றனர்.
      ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நோட்டுப் புத்தகம், ஆடைகள்  வழங்குதல் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.  திருக்குறளில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் சார்ந்த நூல்களையும் வழங்குகின்றனர்.      மன்றத்தின் சார்பில், கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தில் திருக்குறளை பரப்பி வருவோருக்கு சீர்மிகு புலவர் எனும் பட்டமும், பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. சோழவந்தான் திருக்குறள் கருப்பையா,  தமிழண்ணல், மணிமொழியன் உள்ளிட்டோர் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.      வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர, அனைத்து நாள்களிலும் இலக்கிய ஆன்மிக கருத்துகளை அறிஞர்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து பரப்பிவரும் திருவள்ளுவர் மன்றம், பொன்விழாவை கடந்து வைரவிழாவை நோக்கி பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com