ஜம்மு - காஷ்மீரில் சிறுமியை பாலியல் கொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை மாநகர பெண்கள் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெண்கள் துணைக்குழு உறுப்பினர் அமுதா தலைமை வகித்தார். இதில், ஜனநாயக மாதர் சங்க மாநகர் மாவட்ட செயலர் ஆர்.சசிகலா கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில நிர்வாகி ராஜலெட்சுமி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேஸ்வரி, அறிவியல் இயக்க நிர்வாகி வெண்ணிலா, ஏக்தா அமைப்பின் நிர்வாகி அனிதா தீபம், சிஐடியு உழைக்கும் பெண்கள் அமைப்பு, எல்ஐசி மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.