உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 300 கறவை மாடுகள் 50 சதவிகிதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
வேளாண்மை துறை சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் ஒருங்கிணைந்த பண்ணையம் சார்ந்த பயிர் சாகுபடி முறை மற்றும் கறவை மாடுகள் பண்ணையம் குறித்த செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது உசிலம்பட்டி,சேடப்பட்டி,செல்லம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள விவசாயிகளுக்கு கறவைமாடுகள் வழங்கப்பட்டன.
உசிலம்பட்டியில் நடைபெற்ற இவ்விழாவில் வேளாண் துறை துணை இயக்குநர் ராமநாதன் தலைமை வகித்தார். உசிலம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் தனுஷ்கோடி முன்னிலை வகித்தார். பின்னர் உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 100 கறவை மாடுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து சேடபட்டியில் துணை இயக்குநர் தலைமையில் சேடப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரசேகரன் முன்னிலையில் 100 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
செல்லம்பட்டியில் துணை இயக்குநர் மணிமேகலை முன்னிலையில் 100 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர்கள் மணிகண்டன், மேனகா, சிவக்குமார், செல்வேந்திரன் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் உடன் இருந்தனர். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சுருளிமணி நன்றி கூறினார்.