வேலையளிப்பவரின் பங்களிப்புத் தொகையை அரசே செலுத்தும் வருங்கால வைப்புநிதி புதிய திட்டத்தில் சேர அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையர் என்.கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி:
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வேலைஅளிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்படி, புதிய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வேலையளிப்பவரின் பங்களிப்புத் தொகையை அரசே செலுத்தும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து நிறுவனங்களும் இத் திட்டத்தில் பயன்பெறலாம். இந்த நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட திட்டத்துக்கான இணையதளத்தில் பதிவு செய்து கட்டாயம். மதுரை மண்டலத்தில் இத் திட்டம் குறித்து அறியாமல், பல நிறுவனங்கள் பதிவு செய்யாமல் உள்ளன. ஆகவே, இத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்ள மதுரையில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் மற்றும் திண்டுக்கல், சிவகாசியில் உள்ள மாவட்ட அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலை அளிப்பவரின் வங்கிக் கணக்கு விவரங்கள், இபிஎப் குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களுடன் உதவி மையத்தில் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.