ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் மத்திய அரசு, ரயில்வே வாரியத்தின் முடிவைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு ஓடும் தொழிலாளர்கள் பிரிவின் சார்பில் மதுரை ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓடும் தொழிலாளர்கள் பிரிவின் கோட்டச் செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். உதவிக் கோட்டச் செயலர் வி.ராம்குமார் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கினார்.
இதில், ஓய்வுபெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடாது, ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்கான இதரப் படிகளை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
உதவிக் கோட்டச் செயலர் பேச்சிமுத்து, நிர்வாகிகள் தாமரைச்செல்வன், நாகராஜ்பாபு, அழகுராஜா, கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.