தமிழக அரசால் வழங்கப்படும் பெரியார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசால், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றைக் கொண்டது.
நிகழ் ஆண்டுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சேவை செய்தவர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றின் விவரங்கள், சுயவிவரம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியருக்கு அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.