மதுரையில் காணாமல் போன பள்ளி மாணவர்கள் 5 பேர் சென்னையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர்.
மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (14), பசுமலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன்(14), ஹார்விபட்டியைச் சேர்ந்த ஹரிஸ் (14), பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (14), பிரிதீஸ்வரன்(14). இவர்கள் 5 பேரும் பசுமலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கின்றனர்.
வியாழக்கிழமை காலை பள்ளிக்குச்சென்ற இவர்கள் 5 பேரும் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து இவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று மாணவர்கள் குறித்து விசாரித்துள்ளனர். மாணவர்கள் எங்கே சென்றனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லாததால் திருப்பரங்குன்றம் போலீஸில் புகார்அளித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நகராஜன் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். அப்போது, மாணவர் கோடீஸ்வரன் சென்னையில் இருப்பதாக அவரது தாத்தா கருப்பசாமிக்கு, செல்லிடப்பேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்ற மாணவர்கள் குறித்து கோடீஸ்வரனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது சென்னையைச் சுற்றிபார்க்க ஆசைப்பட்டதால் 5 பேரும் ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் போலீஸார் அளித்த தகவலின்பேரில் சென்னை அண்ணா சதுக்கம் போலீஸார் மெரீனா கடற்கரையில் சுற்றிக்கொண்டிருந்த 5 மாணவர்களையும் மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீஸார் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மாணவர்களை அழைத்துவர சென்னை சென்றுள்ளனர்.