ராகிங் புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.மருதுபாண்டியன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது: மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாரால் 19 மாணவர்கள் 6 மாதம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புகார் அளித்த மாணவர்கள் உள்பட அனைத்து முதலாமாண்டு மாணவர்களும், இரண்டாமாண்டு மாணவர்கள் மீதான இடை நீக்கத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 19 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் நிபந்தனைகளை 19 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஏற்கும்பட்சத்தில் தண்டனை குறைப்பு அல்லது தண்டனை ரத்து போன்றவை முடிவு செய்யப்படும் என்றார்.