மதுரை அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
மதுரை அய்யர்பங்களா உச்சபரம்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(45). ஆட்டோ ஓட்டுநரான முருகன் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். துவரிமான் சந்திப்பில் சென்ற போது எதிரே வந்த கார், ஆட்டோ மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகனை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். விபத்துத் தொடர்பாக அவரது மனைவி முருகேஸ்வரி(40) அளித்தப் புகாரின்பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.