மதுரையில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோச்சடை பென்னர் காலனியைச் சேர்ந்த மருத்துவர் அமீர் பாஷா(42). இவர் மாட்டுத்தாவணி பிரஸ் கிளப் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். தினசரி காலை முதல் இரவு வரை இயங்கும் இந்த மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் மருத்துவமனை பூட்டப்பட்டு விடும். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அமீர் பாஷா மருத்துவமனையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதில் நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவரின் அறையில் இருந்த ரூ.1.15 லட்சத்தை திருடிச் சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக அமீர்பாஷா அளித்தப் புகாரின்பேரில் கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.