திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் நாளை சைக்கிள் பேரணி நடைபெறும் என என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது : அதிமுக ஜெ பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சைக்கிள்களில் சென்று மக்கள் சந்திப்பு பேரணி வியாழக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். இது கின்னஸ் சாதனையாக கூட அமையும். பேரணியை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர். திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, 10 ஆயிரம் குடியிருப்புகளுடன் கூடிய துணைக் கோள் நகரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட உள்ளது என்றார்.