திறந்தவெளி சிறை தொடர்பாக சிறை விதிகளில் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி சிறை தொடர்பாக சிறைவிதிகளில்  மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திறந்தவெளி சிறை தொடர்பாக சிறைவிதிகளில்  மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 மதுரை சட்டக்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் கே.கே.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவரது மனு:
 தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் சிறப்பு சிறை, 9 மாவட்ட சிறை, 95 கிளைச் சிறை, 3 திறந்தவெளி  சிறை, 3 பெண்கள் கிளைச் சிறை, 12 இளஞ்சிறார் சிறைகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 966 தண்டனை கைதிகளும், 9 ஆயிரத்து 156 விசாரணை கைதிகளும் உள்ளனர்.
 ஆண் கைதிகளுக்கு பல்வேறு சிறைகள் இருந்தபோதும், 3 திறந்தவெளி சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கைதிகள் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை கொண்ட கைதிகளை திறந்தவெளி சிறைக்கு மாற்றுகின்றனர். இங்குள்ள கைதிகள் மனரீதியான முன்னேற்றம் அடைகின்றனர். அங்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
 இதனால் அவர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியில் வரும்போது நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. ஆனால் இந்த வசதி பெண் கைதிகளுக்கு இல்லை. எனவே தமிழகத்தில் பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க வேண்டும் என்று உள்துறைச் செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு மனு செய்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  
சட்டம் அனைவருக்கும் சமம்.அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் சமமானது. ஆண்,பெண் பாகுபாடு பார்க்க கூடாது. சிறைவிதிகள் 1983 ன் படி கைதி என்ற வார்த்தை ஆண்,பெண் பாகுபாடு பார்க்கவில்லை. 
  எனவே தமிழகத்தில் திறந்தவெளி சிறையில் தங்குவதற்கு பெண்களும் தகுதியானவர்கள் என சிறைவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்ற பாகுபாடு பார்க்காமல் இரு வகை கைதிகளுக்கும் திறந்தவெளி சிறையில் தங்க சிறைவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். 12 வாரங்களுக்குள் திறந்தவெளி சிறை தொடர்பாக சிறைவிதிகளில்  மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக உள்துறை செயலர் மற்றும் தமிழக சிறைதுறைக்கும் உத்தரவிட்டு வழக்கினை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com