பூரண மதுவிலக்கு மற்றும் தீண்டாமை கொடுமையை அறவே அகற்றக் கோரி சென்னையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் அறிவித்துள்ளார்.
பாரதியாரின் 97 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காந்தியப் பேரவை சார்பில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாரதியார் பணியாற்றிய பள்ளியான சேதுபதி பள்ளியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பது பெருமைக்குரியது. இந்தப் பள்ளிக்கு காந்தியடிகளும் வந்திருந்து உரையாற்றியுள்ளார். தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளேன். இதுவரை பத்து முறை மதுவிலக்கை வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளேன். ஐந்து முறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன். மது விலக்குப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை சிறைசென்றுள்ளேன். அதில் ஒரு முறை புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.
காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காந்தியத்தை வலியுறுத்தும் வகையில் மதுவிலக்கை வலியுறுத்தியும், தீண்டாமை இல்லாத நிலை உருவாகவும் வலியுறுத்தி காந்தியப் பேரவை சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத்துக்கு ஆளும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சியின் தலைவர்களையும் அழைத்துள்ளேன். மது விலக்கிற்காக முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.