சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து வெள்ளிக்கிழமை (செப். 14) கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், வைகை ஆற்றின் கரையோரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது. தற்போது கூடுதலாக 2500 கனஅடி நீர் வெள்ளிக்கிழமை (செப். 14) திறக்கப்படுகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற இருப்பதால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும்.
ஆகவே, கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரையோரம் மற்றும் கால்வாய் வழித்தடங்களில் உள்ள மக்கள் வைகை ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன்பிடித்தல், கால்நடைகளைக் குளிப்பாட்டுதல், வாகனங்களைக் கழுவுதல் போன்ற செயல்களில் ஈடுபடவோ, பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்கள், சுயபடங்கள் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை நீர்நிலைகளில் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்கள், விவசாயிகள் நீர் நிலைகளைக் கடக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்.