மாற்றுத்திறனாளிகளிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை கோரும் மனு தொடர்பாக மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி பேராசிரியர் பி.குமரன் தாக்கல் செய்த மனு விவரம்:
மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றிதழ்களுடன், தாங்களாகவே வாகனங்களை ஒட்டிச் செல்லும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று விதி உள்ளது. இதேபோல 40 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றதாகச் சான்றிதழ் பெற்ற மாற்றுத்திறனாளிகளிடமும் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் விதிகளில் உள்ளது. இந்நிலையில் வாகனங்களை மாற்றுத்திறனாளிகள் இயக்கும் வகையில் மாற்றம் செய்திருந்தால் தான் அவர்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்ற மற்றொரு விதியும் உள்ளதாக அதிகாரிகள் கூறி மாற்றுத்திறனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், தற்போது உள்ள நவீன ரக வாகனங்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றிதழ்களுடன் தாங்களே வாகனங்களை இயக்கும்போது சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.