முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை திமுகவில் மீண்டும் இணைக்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை சனிக்கிழமை தொடங்கி உள்ளனர்.
அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதன் பிறகு, அவர் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியில் இணைய முடியவில்லை.
தன்னை இணைத்துக் கொள்ளுமாறு நேரடியாகவே ஊடகங்கள் மூலமாக அழகிரி வேண்டுகோள் விடுத்தும், திமுக தலைமை அமைதி காத்து வருகிறது. இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் வந்த முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன், திமுகவில் அழகிரியை இணைக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: மு.க. அழகிரி திமுகவில் இணைந்து செயலாற்றி, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார். ஆனால், கட்சித் தலைமை மெளனம் காத்து வருகிறது. அழகிரி மற்றும் அவருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் திமுகவில் இணைக்கக் கோரி, மதுரையில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.
திமுக தலைமை அலுவலகத்துக்கு கடிதம், மின்னஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலமாக கையெழுத்து இயக்கத்தை அனுப்பத் தொடங்கியுள்ளோம். மதுரையில் இந்த இயக்கம் தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆதரவாளர்கள் திமுக தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பத் தொடங்கியுள்ளனர் என்றார்.