உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் செவ்வாய்க்கிழமை இரவு கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
உசிலம்பட்டி 9 ஆவது வார்டு கருக்கட்டான்பட்டியில் வருகிற ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி 15 நாள்களுக்கு முன்பு கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தும், முளைப்பாரி வளர்த்தும் திருவிழா வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விழா வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், ஒரு சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கருக்கட்டான்பட்டி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலத்தை செவ்வாய்க்கிழமை இரவில் முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கோட்டாட்சியர் முருகேசன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். புதன்கிழமை காலை 10 மணிக்கு அமைதி பேச்சு வார்த்தை நடத்தலாம் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.