மதுரை மாவட்டம் கீழவளவு அருகே கார் மரத்தில் மோதி ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது சுல்தான் (50). அங்குள்ள நகைக்கடை ஒன்றில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரை புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு அழைத்து வந்தார். பிறகு முகமது சுல்தான் மட்டும் செவ்வாய்க்கிழமை மாலை காரில் புதுக்கோட்டைக்கு திரும்பினார்.
கீழவளவை அடுத்துள்ள புறாக்கூடு மலையருகே, கார் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கார் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் முகமது சுல்தானை காயங்களுடன் மீட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்தும் ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.