அடிப்படை வசதிகள் கோரி வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசியெறிந்து கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வி.மங்கம்மாள்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வையூர் ஊராட்சிக்கு உள்பட்ட இக் கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப் படவில்லை. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், பல கி.மீ. தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரவேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வையூர் ஊராட்சியில் புறக்கணிக்கப்பட்ட கிராமமாக, மங்கம்மாள்பட்டி இருக்கிறது. எனவே, மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலுக்கு முயன்றனர். அதையடுத்து அவர்களிடம் பேச்சு நடத்திய போலீஸார், கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுக்குமாறு கூறி, கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இந்நிலையில், ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் முன்பகுதிக்கு வந்த கிராமத்தினர், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி எறிந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லத்துரை, அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறினார். முதலில் அடிப்படை வசதிகள் செய்துதருமாறு கூறிய கிராமத்தினர், வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்க மறுத்துவிட்டனர்.