மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரத்தை சேர்ந்த பக்கிர்மைதீன் மகள் நூர்நிஷா(34). இவர் தனது உறவினர் ரஹமத்துல்லா என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் காளவாசலுக்குச் சென்றார்.
அரசரடி அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பேருந்து இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நூர்நிஷா பேருந்து சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதில் ரஹமத்துல்லா காயமின்றி தப்பினார்.
விபத்து குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் அரசு பேருந்து ஓட்டுநர் பழனிவேல் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.