மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட தன்னார்வலர்கள் 1,500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் முழுமையாக வாக்களிப்பதற்காக, வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் வரும்போது அவர்களை சக்கர நாற்காலிகளில் அமரச் செய்து வாக்களிக்க அழைத்துச் செல்வதற்காக, தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 1,100 பேர், நேரு யுவகேந்திரா தொண்டர்கள் 250 பேர், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் 50 பேர் என மொத்தம் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணிகள் குறித்த விளக்கக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்களை தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் வழங்கினார். கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.பி.அம்ரித், பயிற்சி ஆட்சியர் கே.எம்.பிரவீண்குமார், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.