தேனி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தானம் பெறப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த காமாட்சி மகன் காமராஜ்(22). இவர் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வத்தலகுண்டிலிருந்து பெரியகுளம் சென்ற போது விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த காமராஜை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு சனிக்கிழமை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காமராஜ் உடல்நிலை மோசமடைந்து மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, மூளைச்சாவு குறித்து காமராஜ் குடும்பத்தினரிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கான சம்மதம் பெறப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே.வனிதா அறிவுறுத்தலின் படி திங்கள்கிழமை சிறுநீரகம், கண், கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானம் பெறப்பட்டது.
இதில் ஒரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் இரண்டு கண்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் வழங்கப்பட்டது.