நீட், ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம்: உயர்நீதிமன்றம்
By DIN | Published On : 17th April 2019 06:08 AM | Last Updated : 17th April 2019 06:08 AM | அ+அ அ- |

விடுமுறை நாள்களில் நீட், ஐஐடி ஆகியவற்றிற்கான தகுதித்தேர்வு, நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு நீட், ஐஐடி ஆகிய தேர்வுகளுக்கு கோடை காலத்தில் தான் வகுப்புகள் நடைபெறும். எனவே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட், ஐஐடி ஆகியவற்றிற்கான தகுதித்தேர்வு, நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். அதேவேளையில் வேறு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...