கொட்டாம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு திருமணமான 5 ஆவது நாளில் புதுமணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சேர்ந்த ஒய்யப்பன் மகள் ராஜலட்சுமி (24). இவருக்கும் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த வீரபாண்டிக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனது மனைவியை, தந்தை வீட்டுக்கு வீரபாண்டி செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துவந்தாராம். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒய்யப்பன் அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.