மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சுற்றுச்சாலை அமைக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த அம்பிகாபதி தாக்கல் செய்த மனு: வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் இருந்து சிட்டம்பட்டி வரை சுற்றுச்சாலை அமைக்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை 2018 ஆம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. இந்த சுற்றுச்சாலை முல்லைப் பெரியாறு பாசன இருபோக பாசன நிலங்கள், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறையிடம் தடையில்லாச் சான்று பெறவில்லை. அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் அறிவிப்பில் தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில் சாலை அமைக்க எல்லைக் கற்கள் நடும்பணி நடைபெற்று வருகிறது. எனவே சாலை அமைக்கும் அறிவிப்பிற்கு தடை விதித்து, இத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதேநிலை தொடர வேண்டும். மேலும் இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயவிவரம்பெயர் : இரா.ரேவதி
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு
வயது : 30
தொழில் : கணினியகம்
கணவர் பெயர் : ராமச்சந்திரன்
கட்சிப் பொறுப்பு : மதுரை தெற்கு
மாவட்ட மகளிர்
பாசறைச் செயலர்