உசிலம்பட்டியில் ஆடு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த ஆடு வியாபாரி சின்னமுனியாண்டி (37). இவருக்கும், அவரது மூத்த சகோதரர் அய்யாத்துரையுடன் சொத்துப் பிரச்னை இருந்துள்ளது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு சின்னமுனியாண்டிக்கும், அய்யாத்துரைக்கும் சொத்துப் பிரச்னையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உசிலம்பட்டியில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு ஆடு விற்பனை செய்ததற்கான தொகையை சின்ன முனியாண்டி வசூல் செய்வதற்காக புதன்கிழமை சென்றுள்ளார். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள இறைச்சிக் கடைக்கு சென்ற போது, அங்கு வந்த அய்யாத்துரையின் மகன் ஆசை (31), சின்னமுனியாண்டியை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சின்னமுனியாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி போலீஸார், சின்னமுனியாண்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சின்னமுனியாண்டியை வெட்டிக் கொலை செய்த ஆசையை கைது செய்தனர்.