மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில சட்டத்துறைச் செயலர் அனந்தராமன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்ரமணியன், தென் மண்டலத் தலைவர் திருஞானம், மாநிலத் துணைத்தலைவர் நாகசுப்ரமணியன், மாவட்ட துணைத்தலைவர் கிறிஸ்டோபர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 14 வகையான நலத்திட்டங்களை கணினியில் உள்ளீடு செய்தல், அரசு பொதுத்தேர்வுகளை நடத்துதல், கற்றல்-கற்பித்தல் போன்ற பன்முக பணிகளை மேற்கொள்ளவிருப்பதால், தலைமை ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களின் நலன்கருதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வேண்டும்.
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விலை உயர்ந்த பொருள்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் உடனடியாக இரவு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்களின் சுகாதாரச்சூழலை கருத்தில் கொண்டு சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களையும் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.