மதுரை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் அகில இந்திய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 8 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
திருநெல்வேலி பெருமாள் புரத்தை சேர்ந்தவர் எமில்ராபின்சிங். இவர் மதுரை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்ற வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ரயில்வேக்களுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் பங்கு பெற்று 4 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மேலும் தனிநபர் பல்நோக்கு நீச்சல் பிரிவு போட்டியில் 4.37 நிமிடங்களில் இலக்கை எட்டியுள்ளார். இந்தப் பிரிவில் தேசிய சாதனை 4.30 நிமிடங்கள் ஆகும். இவரை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, மதுரை கோட்ட விளையாட்டுத் துறை அதிகாரி ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.