ஆடிப்பூரத்தையொட்டி திருப்பரங்குன்றம் பத்ர காளியம்மன் கோயிலில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடிபூரத் திருவிழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதுடன் ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், தேங்காய்சாதம் உள்ளிட்ட 5 வகை சாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சுடலைமணி, அருணாச்சலம், காமராஜ், காசிராஜன் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.