மதுரையில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதயங்களை இணைக்கும் சங்கம திருவிழா என்ற தலைப்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் ஓய்வு பெற்ற ஐஜி சந்திரசேரகன், தடயவியல் துறை முன்னாள் இயக்குநர் விஜயக்குமார், முன்னாள் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என உயர்அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஒரே இடத்தில் பணியாற்றி பிரிந்த காவல் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். தங்கள் குடும்பத்தினரை அறிமுகம் செய்து கொண்டனர்.
விழாவில் 97 வயதுடைய ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் ஹரிகிருஷ்ணன் பங்கேற்றிருந்தார். விழாவில் பாட்டு, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மூத்த காவல் அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த சந்திப்பு விழாவை ராமநாதபுரம் ரிசர்வ் லைன் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி போலீஸார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற காவல் அதிகாரிகள் 1960 மற்றும் 1970 -ஆம் ஆண்டுகளில் பணியாற்றி அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.