மதுரை மத்திய சிறைக் காவலர் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக தேடப்பட்டு வந்த ரௌடிகள் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மத்திய சிறைக் காவலர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஜூன் மாதம் ஆயுதங்களுடன் இருவர் சுற்றித் திரிந்தனர். இது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து கேமராக்களில் பதிவாகியிருந்த நபர் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரௌடி கீரிமணி என்பது தெரியவந்தது. ஆனால் உடன் வந்தது யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிறை நிர்வாகம் சார்பில் கரிமேடு காவல்நிலையத்தில் கீரிமணி உள்பட இருவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆரப்பாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் இருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த கரிமேடு போலீஸார், இருவரையும் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் மத்திய சிறைக் காவலர் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த கீரிமணி மற்றும் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.