சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் மதுரை ரயில் நிலையத்தில் வந்திறங்கிய பெண் பயணி, 47 பவுன் நகையுடன் தவறவிட்ட கைப்பையை மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் துரிதமாக செயல்பட்டு ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
சென்னையைச் சேர்ந்தவர் மீரா (55). இவர் மதுரையில் உள்ள தனது அண்ணன் ராமச்சந்திரன் வீட்டுக்கு செல்வதற்காக, சனிக்கிழமை இரவு அனந்தபுரி விரைவு ரயிலில் சென்னையில் இருந்து புறப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இறங்கினார்.
இறங்கிய பின்னர் தான் எடுத்துவந்த கைப்பையை ரயிலில் தவறவிட்டு இறங்கியது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரிடம், தான் எடுத்து வந்த பையை ரயிலில் தவறவிட்டு விட்டதாகவும், அதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான 47 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 580 பணம் மற்றும் 2 விலை உயர்ந்த செல்லிடப்பேசிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படையினர், விருதுநகர் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள், பெட்டி எண் எஸ் 7-ல் தேடிய போது, மீராவின் கைப்பை அதே இடத்தில் இருந்தது.
அவை போலீஸாரால் மதுரை ரயில் நிலைத்திற்கு கொண்டு வரப்பட்டு, நகை, பணம் மற்றும் செல்லிடப்பேசிகள் அனைத்தும் காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் முன்னிலையில் மீராவின் சகோதரர் ராமச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் முகேஷ்குமார், துரிதமாக செயல்பட்டு நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுத்த பாதுகாப்புப்படை வீரர்கள் பாபு, சுரேஷ்குமார் உள்ளிட்டோரை பாராட்டினார்.