நாட்டின் பொருளாதாரம் கடும் விழ்ச்சியடைந்துள்ளதை மறைக்கவே மத்திய அரசு காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
வேலூரில் திமுக வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. நாட்டின் பொருளாதாரம் கடும் விழ்ச்சியை சந்திந்து வருகிறது. இதனை மறைப்பதக்காகவே பிரதமர் மோடி 90 ஆயிரம் ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி இருக்கிறார்.
அங்குள்ள முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். காஷ்மீரில் மட்டுமல்ல ஒடிஸா உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்கின்றன.
ஏறக்குறைய 60 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தீவிரவாதம், வன்முறை இருக்கிறது என்பதற்காக அங்கு ஜனநாயக நெறிமுறைகளை மீறக் கூடாது என்றார்.
திண்டுக்கல்லில்...தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்துள்ள கொங்கர்குளத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
விமர்சனம் செய்வது மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான பணிகளையும் எதிர்க்கட்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சி சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
காஷ்மீரை இரண்டாகப் பிரித்த மத்திய அரசின் முடிவு தவறானது. ஒற்றுமையாக உள்ள தேசத்தில் ஜாதி மதம் என்ற பிரிவினையை பாஜக ஏற்படுத்தி வருகிறது என்றார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை. தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பான தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களுக்கு அடிமையாக செயல்படுகிறது என்றார்.