திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி கண்மாய்களிலும் குடிமராமத்துப் பணி: விவசாயிகள் கோரிக்கை

திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளுக்கு உள்பட்ட மானாவாரி கண்மாய்களில் குடிமராமத்துப் பணி செய்ய வேண்டும்

திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளுக்கு உள்பட்ட மானாவாரி கண்மாய்களில் குடிமராமத்துப் பணி செய்ய வேண்டும் என குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
 திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். 
இதில், மானாவாரி கண்மாய்களில் குடிமராமத்து பணிகளை தொடங்க வேண்டும். கண்மாய் கரைகளை பலப்படுத்தி, மடைகளை சீரமைக்க வேண்டும். தென்பழஞ்சியில் உள்ள அங்கன்வாடிக்கு மின் இணைப்பு தரவேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே பள்ளியின் சுற்றுச்சுவரை உயரமாகக் கட்ட வேண்டும். தனக்கன்குளம் கண்மாய் மற்றும் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டும். கிராமங்களில் பெரும்பாலானோருக்கு முதியோர் உதவித்தொகை கிடை க்கவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். விவசாயிகளின் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் நாகராஜன் தெரிவித்தார்.  கூட்டத்தில் தென்பஞ்சி, வடபழஞ்சி, திருப்பரங்குன்றம், தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பாண்டி, சிவராமன், அழகு, நல்லக்கண்ணு, பசீர், சமயன், கருப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.    
மேலூர்: மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  வட்டாட்சியர் சிவகாமிநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.  இதில், பெரியாறு-வைகை அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. எனவே ஆகஸ்ட் மாதத்திலேயே விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும்.  சிங்கம்புணரி நீட்டிப்புக் கால்வாய் பகுதியையும் விரிவாக்க கால்வாய் பாசன பகுதிகளையும் நிரந்தர பாசன பகுதிகளாக அறிவிக்கவேண்டும். அட்டப்பட்டி, பாலாறு, மணிமுத்தாறு நீர்நிலைகளில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒருபோக சாகுபடிப்பகுதி விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் மீ.முருகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் என்.பழனிச்சாமி மற்றும் ராஜமாணிக்கம், ராஜா உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com