மதுரை அருகே மதிச்சியத்தில் முன்விரோதத்தில் சுமை தூக்கும் தொழிலாளியை கொலை செய்த 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை அருகே மதிச்சியத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருடைய மனைவி மற்றும் மகளைக் கேலி செய்த விவகாரத்தில் இவருக்கும், செல்லூரைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மணிகண்டன் மதிச்சியம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்கிக் கொண்டு நடந்து சென்றார்.
அப்போது மணிகண்டனை வழிமறித்த, உமா மகேஸ்வரன்(21), மதிச்சியத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (22), புளியந்தோப்பைச் சேர்ந்த மாரிமுத்து (23) ஆகியோர் அவரைக் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மணிகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மணிகண்டனின் மனைவி ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸார், உமா மகேஸ்வரன், மீனாட்சிசுந்தரம், மாரிமுத்து ஆகியோரைக் கைது செய்தனர்.