சுதந்திரதினத்தை முன்னிட்டு புலன் விசாரணையில் சிறப்பாகப் பணியாற்றிய மதுரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பெண் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுரை நகர் சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஆகியோருக்கு முதல்வர் பங்கேற்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 16 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச்சேவைக்கான விருது மற்றும் பதக்கங்கள் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
இந்த விருதுகள் சென்னையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நடக்கும் சுதந்திர தின விழாவில், முதல்வர் வழங்க உள்ளார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில் மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வனிதா, புலன் விசாரணைப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக பதக்கம் பெற உள்ளார். இதில் எட்டு கிராம் தங்கப் பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என முதல்வர் வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் காவல்துறையில் சிறந்த புலனாய்வுப் பணிக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்விருதுக்கு தமிழகத்தில் இருந்து 5 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் மதுரை நகர் சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி வி.சந்திரசேகரன் தேர்வாகியுள்ளார். இவருக்கும் சென்னையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விருது வழங்குகிறார்.
வி.சந்திரசேகரன் ஏற்கெனவே 2015 -இல் குடியரசுத் தலைவர் விருது, 2010-இல் உத்தமர் காந்தி விருது, 2010 மற்றும் 2017-இல் சிறந்த புலனாய்வு பணிக்கான மாநில விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.