முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்கு மத்திய காவல்துறை படையை நியமிக்க வேண்டும். அணையின் நீர்பிடிப்புப் பகுதியான 136 அடி முதல் 155 அடி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் எனத் தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் 8 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.