மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்ற 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான், கிணற்று தெருவில் கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி முத்து (45) மற்றும் அவரது மகன் அருள்செல்வம் (24) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது குறித்து சோழவந்தான் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 2.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே எம். பாரைப்பட்டியைச் சேர்ந்த ராமர்(45). இவர் அதே பகுதியில் வியாழக்கிழமை கஞ்சா விற்பனை செய்தபோது எழுமலை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1.500 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். உசிலம்பட்டி அருகே கின்னிமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை கஞ்சா விற்ற திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த விஜயபாண்டி(31)யை செக்கானூரணி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று மேலூர் பகுதியில் கஞ்சா விற்ற முகமதியாபுரத்தைச் சேர்ந்த நாகராஜ்(20) என்பவரை மேலூர் போலீஸாரும், சேடப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற அலிகுன்றம் வடக்கு தெருவைச் சேர்ந்த பாண்டி(46)யை சேப்பட்டி போலீஸாரும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.