மதுரையில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் கிடைக்கப்பெறும் சிசிடிவி பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது, பகிரும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) வெளியிட்ட குறிப்பாணை: மதுரையில் நடைபெறும் குற்றச்சம்பவங்களின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, குற்றங்கள் நடைபெறும் பகுதிகளில் கிடைக்கும் சிசிடிவி பதிவுகள் போலீஸாருக்கு பெரும் உதவியாக உள்ளது. சிசிடிவி பதிவுகள் குற்ற வழக்குகளுக்கு அறிவியல் பூர்வமான மிக முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் அண்மைக்காலமாக குற்றச் சம்பவங்களின் சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு, குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறது. இதுபோன்று சிசிடிவி பதிவுகளை வலைதளங்களில் பகிர்வது குற்றச் செயலாகும். எனவே, வழக்குகள் சம்பந்தப்பட்ட சிசிடிவி பதிவுகளை சமூக வலைதளங்களில் காவல்துறையினர் பகிரக் கூடாது. அப்படி பகிர்ந்தால் சாட்சியை கலைத்ததாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.