மதுரையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறித்த அடையாளம் தெரியாத நபரை குடியிருப்பு வாசிகள் பிடித்து போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே தனியார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் மாடியில் சுந்தரம்மாள் (80) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி சுந்தரம்மாள் கழுத்தில் இருந்த நகையை கேட்டுள்ளார். ஆனால், மூதாட்டி நகையை தர மறுத்தையடுத்து, அவரை தாக்கி கழுத்தில் இருந்த நகை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த குடியிருப்பு வாசிகள் அந்த நபரைப் பிடித்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர். இதில், அந்த நபர் செல்லூரைச் சேர்ந்த சுந்தரவேல் (35) என தெரியவந்தது. இதையடுத்து மதிச்சியம் பேலீஸார் வழக்குப்பதிந்து சுந்தரவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.