பிஎஸ்என்எல் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாக ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கக்கோரி, மதுரையில் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் தர்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மதுரை கோரிப்பாளைம் பள்ளி வாசல் வீதியில், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் தர்னாவில் ஈடுபட்டனர். இதில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் கேபிள் பணி, துப்புரவு உள்ளிட்ட பணிகளில் 360 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தங்களுக்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கவில்லை. இதனால் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து சென்றார். மாவட்ட நிர்வாகிகள் சி.செல்வின் சத்தியராஜ், என்.சோனைமுத்து, கே.வீரபத்திரன், ஆர்.சுப்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.