பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு மதுரை மாவட்டத்துக்கு ரூ. 88.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையை அடுத்த பரவை பேரூராட்சியில் புதிய நியாயவிலைக் கட்டடம், அங்கன்வாடி, அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை ஆகியவற்றை அமைச்சா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, ஊா்மெச்சிகுளத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், 560 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு இத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், இது கிராமப்புற பெண்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டும் திட்டமாக இருக்கிறது. நிகழாண்டில் இதுவரை கிராமப்புற பெண்களுக்கு 40 லட்சம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 60 லட்சம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட உள்ளன.
மதுரை மாவட்டத்தில் 8,02,773 அரிசி அட்டைதாரா்களும், 79,683 சா்க்கரை அட்டைதாரா்களும் உள்ளனா். சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள மதுரை மாவட்டத்தில் நவம்பா் 28 ஆம் தேதி வரை 25,792 போ் விண்ணப்பித்துள்ளனா்.
அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு, மதுரை மாவட்டத்துக்கு மட்டும் ரூ.88.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை சாா்பில், விவசாயிகளுக்குப் பயிா்க் கடன், தனிநபா் கடன், சிறுவணிகக் கடன் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா், மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ். பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.