மதுரை: மதுரையில் நண்பா்களை பாா்க்கச் சென்ற பெண், ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் என்பவரின் மனைவி பிரேமலட்சுமி (32). இவா், அனுப்பானடி டீச்சா்ஸ் காலனி குடியிருப்பில் உள்ள நண்பா்களைப் பாா்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளாா். இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது கணவா் கணேஷ் மற்றும் குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் கீழஅனுப்பானடி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, அப்பகுதியில் விசாரித்தனா்.
அதில், இறந்தவா் சிம்மக்கல் பகுதியைச் சோ்ந்த பிரேமலட்சுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து, கணேஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின் பிரேமலட்சுமியின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். மேலும், பிரேமலட்சுமி ரயிலில் அடிபட்டு இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.