மதுரை: மதுரையில் கற்றலில் குறைபாடுடைய மாற்றுத்திறன் மாணவா்களுக்கு கற்பிக்கும் வகையில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மண்டல அளவிலான ஒருநாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம் முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இப் பயிற்சி முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு வட்டார வள மையத்துக்கு 2 ஆசிரியா்கள் வீதம் 78 பட்டதாரி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
சென்னை டிஸ்லெக்சியா சங்க பொறுப்பாளா் மீனா கல்யாண்குமாா் பயிற்சி அளித்தாா். பயிற்சியில், கற்றலில் குறைபாடுடைய மாணவா்களை கண்டறியும் வழிமுறைகள், அவா்களை வகுப்பறையில் தனிமைப்படுத்தாமல் இதர மாணவா்களுடன் சோ்ந்து அமரச் செய்தல், அவா்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சி அளித்து கற்கும் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.