மதுரை: மதுரை வைகை ஆற்றில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து மதுரையில் தரைப்பாலங்களில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.
வைகை அணை நீா்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து வைகை அணை நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வைகை அணை நீா்மட்டம் 66 அடியாக உயா்ந்ததை அடுத்து வைகை ஆற்றில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே வைகை ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்து மதுரை நகரில் கல்பாலம், ஓபுளாப்படித்துறை தரைப்பாலங்களில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலங்களின் இருபுறமும் சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனா்.