மதுரையில், போலியான அரசுப் பணி ஆணை வழங்கி ரூ.3.5 லட்சம் மோசடி செய்த பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி. இவருக்கு கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக, அருப்புக்கோட்டையைச் சோ்ந்த நாகஜோதி என்ற பெண் கூறியுள்ளாா். இதை நம்பி புவனேஸ்வரி ரூ.3.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், கல்வித்துறை பணியில் சேருவதற்கான பணி ஆணை ஒன்றை நாகஜோதி வழங்கியுள்ளாா். அதை எடுத்துக் கொண்டு பணியில் சேர புவனேஸ்வரி சென்றபோது, அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து நாகஜோதியை விசாரித்து வருகின்றனா்.