திருப்பரங்குன்றம், பெருங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பிரதமரின் திட்டத்தில் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மர்ம கும்பல், பெண்களிடம் பண மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம், பெருங்குடி, குசவன்குண்டு, சோளங்குருணி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மர்ம கும்பல், பிரதமரின் திட்டத்தின் கீழ் ரூ. 1.5 லட்சம் கடன் வங்கியில் பெற்றுத்தருவதாகக் கூறி அவர்களின் ஆதார் அட்டை, புகைப்படம் உள்ளிட்டவைகளோடு ரூ.500 முதல் ரூ.1000 வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றுகின்றனர். பணம் வாங்கிக் கொண்டு சென்றகும்பல் அடுத்தடுத்த கிராமங்களில் இதுபோல மோடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் பாஜக மண்டல் தலைவர் கே.பி.வேல்முருகன் கூறியது: திருப்பரங்குன்றம் படப்பிடி தெரு, கீழத்தெரு மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களிடம் பிரதமர் திட்டத்தின் கீழ் மர்மக் கும்பல் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர். இது வரும் மக்களவை தேர்தலில் பாஜக பெயரை கெடுக்கும் செயலாக உள்ளது. மேலும் பல கிராமப் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளோம் என்றார்.