மதுரை காளவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த கரிமேடு போலீஸார் 3.5 கிலோ கஞ்சாவை சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
மதுரை காளவாசல் பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கரிமேடு சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அதில் ஆரப்பாளையம் கோபாலன் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன்(38), பைக்காராவை சேர்ந்த சின்னன் மகன் மகாலிங்கம்(47) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து, 3.5 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.